திருவண்ணாமலை அருகே கள்ளச்சாராயம் பறிமுதல்
திருவண்ணாமலை அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 145லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி., அரவிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவல் அடிப்படையில் எஸ்பி உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி அசோக்குமார் தலைமையில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி பழனி , செங்கம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் இன்று காலை நல்லவன்பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில், அப்பகுதியில் உள்ள ஒரு கொட்டகையில் 145 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் சாராயத்தை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தியதில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வைத்தீஸ்வரி (27), நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரிதா(34), தண்டராம்பட்டு தாலுக்கா தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (48) ஆகிய 3 பேரும் விற்பனை செய்வதற்காக கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மதுவிலக்கு போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர் . மேலும் 145 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.