ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ பதிவு

Erode news- ஈரோடு ஆர்.கே.வி சாலையில் சாக்கடை ஆறாக ஓடிய மழைநீர்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நேற்று மாலை சுமார் 3.45 மணியளவில் ஈரோடு மாநகர் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து, சுமார் அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது.
இந்த மழையின் காரணமாக மாநகரில் தாழ்வான இடங்களில் மழை நீர் கழிவு நீர் ஓடைகளில் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. முனிசிபல் காலனி, கிருஷ்ணம்பாளையம், காவேரி சாலை, ஆர்.கே.வி.சாலை, கொங்காலம்மன் கோவில் வீதி உள்ளிட்ட மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலையில் சாக்கடை ஆறாக ஓடியது. இதேபோல், கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது.
அதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம், நம்பியூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் லேசான மழை பெய்தது. அதிகாலையில் பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று (மே.13) திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இன்று (மே.14) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
எலந்தகுட்டைமேடு - 33.4 மி.மீ,
தாளவாடி - 23.6 மி.மீ,
கோபிசெட்டிபாளையம் - 23.2 மி.மீ,
ஈரோடு - 14.00 மி.மீ,
பவானிசாகர் - 13.2 மி.மீ,
சென்னிமலை - 4.00 மி.மீ,
மாவட்டத்தில் மொத்தமாக 111.4 மி.மீ ஆகவும், சராசரியாக 6.55 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu