திருத்தணி அருகே இருளர் இன மக்களுக்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க கோரிக்கை
பங்களாமேடு இருளர் இன மக்களுக்கு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
HIGHLIGHTS
உப்பு தண்ணீரை பருகி வரும் பங்களாமேடு இருளர் இன மக்களுக்கு, தொண்டை வீக்க நோய் தாக்கம், இவர்களுக்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, செருகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பங்களாமேட்டில் சுமார் 58 குடும்பங்களைச் சார்ந்த 350 க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்களின் விளைவாக 40 குடும்பத்திற்கு குடிமனை பட்டா, மின் இணைப்பு, குடிநீர், தொகுப்பு வீடுகள் பெற்றுள்ளனர். பட்டா கிடைக்காதவர்கள் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
செருக்கனூரில் வாழ்ந்து வந்த இருளர் இன மக்கள், இடநெருக்கடி காரணமாக பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, ஆட்கள் நடமாட்டமே இல்லாத காட்டு பகுதியான பங்களாமேட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அரசுத்துறை அதிகாரிகள், இந்த மக்களை வசிக்குமாறு கூறி சென்று விட்டனர்.
குடிக்க தண்ணீர் கூட இல்லாத பாலைவனம் போன்ற இடம் என்பதால் பின்னர், அருகில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்திலிருந்து பைப் லைனிங் மூலம் குடிநீர் வினியோகம் செய்தனர்.அது குடிக்க முடியாத அளவிற்கு உப்பு நீராக இருந்துள்ளது. நல்ல தண்ணீர் வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்திய பிறகு, 2013-ம் ஆண்டு பங்களாமேட்டில் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. சிறிது காலம் குடிநீர் நன்றாக இருந்தது. பிறகு வறட்சி ஏற்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் அதுவும் உப்பு நீராக மாறியது. இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையினால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. என்றாலும் நிலத்தடி நீர், நிறம் மாறியதோடு, உப்பு நீராகவும் இன்றளவும் இருந்து வருகிறது.
தொண்டை வீக்கம் நோய் தாக்கம்
வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக உப்பு தண்ணீரை இது நாள் வரையில் சகித்துக் கொண்டு பருகி வருகின்றனர். சமையலுக்கும் இந்த உப்பு தண்ணீரையே பயன்படுத்துகிறார்கள். இதனால் தொண்டை வீக்கம், காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.இதில் வெங்கடேசன்-அமுலு ஆகியோரின் 7 வயது மகன் மகேஷ்க்கு தொண்டையில் சதை வளர்ச்சி, வீக்கம் ஏற்பட்டுள்ளது. உப்பு நீரில் சமைப்பதால், இரவில் சமைத்த உணவை காலையில் கஞ்சியாக குடிக்க முடியாது. நாளெல்லாம் உழைத்து விட்டு, வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியாக உணவை சாப்பிட முடியாது, அந்தளவிற்கு உப்பு தண்ணீரால் அவதிப்படுகின்றனர்.
இராணிபேட்டையை நோக்கி மக்கள் படையெடுப்பு
நல்ல தண்ணீரை பருக வேண்டும் என்பதற்காக 3. கி.மீ. தூரத்திற்கு அப்பால் உள்ள இராணிப்பேட்டை மாவட்டம், ஜானகாபுரம் கிராமத்திற்கு சென்று அங்கு ஊராட்சி மன்ற தெரு குழாய்களில் வரும் குடிநீரை சைக்கிள்கள் மூலமும், தலையிலும் சுமந்து வருகின்றனர். இருளர் இன மக்களுக்கு நல்ல தண்ணீரை கூட வழங்க முடியாத நிலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இருக்கிறது.
மலைவாழ் மக்கள் சங்கம் வேண்டுகோள்
பங்களாமேட்டில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், சுகாதார துறையினர் அங்கு முகாம் நடத்தி அனைவரையும் பரிசோதனை செய்து, மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தியுள்ளார்.இதனை தொடர்ந்து நாள் தோறும் இரண்டு வேளையும் டேங்கர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கி இருளர் இன மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், சுகாதார பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என, ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.