நெல்லை: மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உலக மக்கள் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
உலக மக்கள் தொகை உறுதி மொழி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
உலக மக்கள் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் உடன் உறுதிமொழி எடுத்து, விழிப்புணர்வு வாகனத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
உலக மக்கள் தினம் இன்று, உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நெடுமாறன், ஆகியோர் முன்னிலையில் உறுதி மொழியினை அனைத்து செவிலியர்களும் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் ஆட்சியர் பேசுகையில், தற்போது கோவிட்-19 பரவல் காரணமாக நிலவும் நெருக்கடியான காலத்திலும் பச்சிளம் குழந்தைகளையும், கர்ப்பிணி தாய்மார்களையும் பாதுகாப்பதில் மிகுந்த கவனத்தோடு மருத்துவம். மக்கள் நல்வாழ்வு துறை பணியாற்றி வருகிறது. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு இன்றியமையாத தேவையான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம் மற்றும் சிறந்த சமுதாய சூழ்நிலை ஆகியவை அனைத்தும் மக்களுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க வழி பிறக்கும் என குறிப்பிட்டார் .