நெல்லையில் களைகட்டும் தீபாவளி விற்பனை: ஜவுளி கடைகளில் குவிந்த கூட்டம்
கொரோனா தளர்வுகளை தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.
HIGHLIGHTS
நெல்லையில் தீபாவளி பண்டிகை களை கட்டத் தொடங்கிவிட்டது. தீபாவளி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று மக்கள் புத்தாடை அணிந்தும், பலவகையான இனிப்புகளை படைத்தும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடுவார்கள்.
ஆண்டு முழுவதும் உழைத்தாலும் தீபாவளியன்று குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. ஆனால் கொரோனா தொற்று குறைவடைந்ததால் இந்த ஆண்டு தீபாவளி அதிவிமரிசையாக கொண்டாட மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நெல்லையில் தீபாவளி களை கட்டத் தொடங்கி விட்டது. நெல்லை டவுண் வடக்கு ரத வீதியில் ஜவுளி கடைகள் அதிகமாக உள்ளதால் மக்கள் புத்தாடைகள் எடுக்க கூட்டம் கூட்டமாக வந்தனர். இதே போன்று வண்ணாரப்பேட்டை, பைப்பாஸ் சாலையில் ஜவுளி நிறுவனங்களில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டமாக வந்தனர். மக்கள் கொரோனா விதி முறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வந்தனர்.