ஸ்மார்ட்சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக நெல்லை மாநகராட்சிக்கு விருது
சீர்மிகு நகரத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு திருநெல்வேலி மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
சீர்மிகு நகரத் திட்டம் (Smart City) 25.06.2015 அன்று மத்திய அரசால் துவக்கப்பட்ட இத்திட்டமானது திருநெல்வேலி மாநகராட்சியில் 22.12.2017 அன்று தான் சீர்மிகு நகரமாக தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது.
அதன்படி இச்சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மொத்த மதிப்பீடு தொகை ரூ.965 கோடியாகும்.
தற்போது இத்திட்டத்தின் கீழ் பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் சரக்கு வாகன முனையம் அமைத்தல், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் அபிவிருத்திப் பணிகள், அறிவியல் பூங்கா அமைத்தல், பாளையங்கோட்டை பேரூந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள், மின்கலம் மூலம் இயங்கும் வாகனங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட 32 திட்டப்பணிகள் ரூ.319.02 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்துள்ளது.
மேலும், சந்திப்பு பேருந்து நிலைய அபிவிருத்திப் பணிகள், வணிக மையம் மேம்படுத்தும் பணிகள், போஸ் தினசரி சந்தை மேம்படுத்தும் பணிகள், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வணிக மையம் கட்டும் பணிகள், நேரு சிறுவர் கலையரங்கம் மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட 52 எண்ணம் திட்டப்பணிகள் ரூ.642.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
சீர்மிகு நகரத் திட்டப்பணிகள் சிறப்பாக திருநெல்வேலி மாநகராட்சி செயல்படுத்தப்பட்டமைக்கு மூன்றாவது சுற்றில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாநகராட்சி முதல் இடத்திலும், இந்திய அளவில் மூன்றாவது இடமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள் தொடர்பாக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சரகத்தால் சூரத்தில் (India Smart Cities Awards Contest) 2020 விருது வழங்கும் விழா 18.04.2022 முதல் 20.04.2022 ஆகிய நாட்களில் நடை பெற்றது.
இவ்விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சீர்மிகு நகர நிர்வாக இயக்குநர் ப.விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு திருநெல்வேலி மாநகராட்சிக்கான விருதினை பெற்றுக் கொண்டார்.