நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தெகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்துமரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு, மற்றும் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அறிவுறுத்தினார். முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளை இருக்கையில் அமரவைத்து அவர்களது இருக்கைக்கு சென்று அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
மேலும் கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களிடம் முகக்கவசம் கட்டாயம் அணிவதன் அவசியம் குறித்தும், பொது இடங்களுக்கு சென்று வரும்போது கை கால்களை அவ்வப்போது சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் ஏ.வி மூர்த்தி, தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) சி.தமிழரசி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கே.பி.பிரம்மநாயகம் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.