மாட்டுப் பொங்கலையொட்டி மாடுகள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் ஊட்டி வழிபாடு
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக மாடுகள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் ஊட்டி வழிபாடு செய்தனர்.
HIGHLIGHTS
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடுகளை அலங்கரித்து பொங்கலிட்டு மாடுகளுக்கு பூஜை செய்து திருஷ்டி சுத்தி வழிபட்டனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. பொங்கலுக்கு மறு நாளான இன்று மாட்டுப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம், உடையார்பட்டி, தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் கிராமத்தில் விவசாயிகள் பலர் மாடுகளை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர். உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காலையில் எழுந்து மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
குறிப்பாக மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, புதிய சரடு கயிறுகள் மாட்டி, நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து அழகுபடுத்தினர். பின்னர் மாட்டுத் தொழுவத்தின் அருகாமையிலும், வீட்டின் முற்றத்திலும் கால்நடைகள் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் மாடுகளின் கழுத்தில் கரும்பு, கண்ணுப்பூ, பனங்கிழங்கு, தேங்காய் போன்றவற்றை கட்டி மாடுகளை அவிழ்த்துவிட்டனர்.
அதற்கு முன்னதாக ஆண்டு முழுவதும் விவசாயிகளுக்கு ஓயாமல் உழைத்து தரும் மாடுகளுக்கு திருஷ்டி கழிப்பது முக்கிய நிகழ்வாகும். அதாவது மிளகு, உப்பு, பருத்தி கொட்டை, வத்தல் கொண்டு மாடுகளுக்கு திருஷ்ட்டி சுத்தப்படும். திருஷ்டி சுத்தப்பட்ட பொருட்களை நெருப்பில் இட்டு அதனை மாடுகள் தாண்டி சென்று ஊரை சுற்றி வீடு வந்து மாடுகள் சேரும்.