நெல்லை மாவட்ட 482 அரசுப்பள்ளிகளில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 482 அரசுப்பள்ளிகளில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
HIGHLIGHTS
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் - 2009 ன்படி அனைத்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்ந்த பள்ளி செயல்பாடுகளை பள்ளி திட்டமிடவும், செயல்படுத்தவும், மேலாண்மை செய்வதற்காகவும், குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும், பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
இதனைக் கருத்தில்கொண்டு மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக்குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி அளித்து இக்குழுக்கள் சிறப்பாக செயல்பட ஊக்கமளிக்கவும் திட்டமிடப்பட்டு அரசு வழிகாட்டுதலின்படி, மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட அளவில் அரசுப்பள்ளி பள்ளி மேலாண்மைக்குழு சார்ந்த பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது. கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்து கொள்வதற்கான அவசியம் குறித்து இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மூலம் அனைத்து குடியிருப்புகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நமது மாவட்டத்தில் 341 தொடக்கப்பள்ளிகளிலும், 49 நடுநிலைப்பள்ளிகளிலும், 43 உயர்நிலைப்பள்ளிகளிலும், 49 மேல்நிலைப்பள்ளிகளிலும், மொத்தம் 482 அரசுப்பள்ளிகளில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 24235 மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் சிவராஜ், கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை நாச்சியார், உதவி தலைமை ஆசிரியை மலர்விழி, பெற்றோர் ஆசிரியர் கலகத் தலைவர் ரோலஸ் பாலன், கல்வியாளர் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நல்லசிவன், ஆசிரியர் பயிற்றுநர் திருநெல்வேலி புறநகர் கார்த்திகா , பெற்றோர் சுப்புலெட்சுமி மற்றும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.