நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து
ராமையன்பட்டியிலுள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் வாகன ஓட்டிகள் பொது மக்கள் புகை மண்டலத்தால் சிரமப்பட்டனர்
HIGHLIGHTS
நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான ராமையன்பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வாகனங்கள் மூலம் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ கொழுந்து விட்டு எரிவதினால் நெல்லை- சங்கரன்கோவில் சாலையில் ராமாயன்பட்டி பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. புகையின் தாக்கம் ராமையன்பட்டி பகுதியில் 15 முதல் 25 நாட்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் என்றும் அதனால் பலரும் ஊரை காலி செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாநகராட்சி குப்பை கிடங்கு சங்கரன்கோவில் சாலையில் உள்ள ராமையன்பட்டியில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 32.5ஏக்கர் நிலப்பரப்பில் ராமையன் பட்டியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் மாநகரப் பகுதிகளில் சேகரிக்கும் தினசரி 110 க்கு டன்னுக்கு அதிகமான குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது . மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நுண் உரக்கடங்குகள் இருந்தாலும் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் மலை போல் குப்பைகள் காட்சியளிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதினால் குப்பை கிடங்குகள் தீப்பிடிப்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது இந்த நிலையில் இன்று மாலை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீப்பிடித்ததினால் சங்கரன்கோவில் நெல்லை சாலையில் ராமாயன்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
ராமையன்பட்டியை ஒட்டி உள்ள அரசு புது காலனி ,சிவாஜி நகர் பாலாஜி நகர், சத்திரம் புதுகுளம் ,சங்கு முத்தம்மாள்புரம் ,அன்னை வேளாங்கண்ணி நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் புகை மூட்டத்துடன் சிரமப்பட்டு வருகின்றனர்.பேட்டை, பாளையங்கோட்டை, நாங்குநேரி மற்றும் சேரன் மகாதேவி தீயணைப்பு நிலைய ஊழியர்கள் தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைத்து வருகின்றனர்.