தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் விழிப்புணர்வு வார நிறைவு விழா..
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் விழிப்புணர்வு வார நிறைவு விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் ஆண்டுதோறும் ஒருவாரம் விழிப்புணர்வு வார விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தமிழகத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்களில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.
இதேபோல, மத்திய கப்பல் அமைச்சகத்தின் உத்தரவுப்படி, தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் ஆண்டுதோறும் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா நடத்தப்படுவது உண்டு. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான கண்காணிப்பு வார விழா ஒருவாரம் நடைபெற்றது.
கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, துறைமுக நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்ட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, விழாவின் நிறைவு நாள் விழா 'வளர்ந்த தேசத்திற்கு ஊழல் இல்லாத இந்தியா' என்ற தலைப்பில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி துறைமுக ஜவஹகர்லால் நேரு கூட்டரங்கில் வைத்து வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, வஉசி துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைமை கண்காணிப்பு அதிகாரி முரளி கிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். துறைமுக ஆணைய துணைத் தலைவர் பிமல்குமார் ஜோ முன்னிலை வகித்தார். விழாவில், துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் பேசியதாவது:
நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக வளர்ந்து வருகின்ற வேளையில், உண்மை, ஒழுக்கம், நேர்மை பற்றிய முக்கியதுவத்தை இளைஞர்கள் மனதில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. துறைமுக அதிகாரிகளிடம், அதிகாரபூர்வ நடைமுறைகளை
செயல்படுத்தும்போது, நிறுவனத்தின் செயல்பாடுகள் சீராக இருக்க "மனித நேய" அணுகுமுறை கையாள வேண்டும் என்று ராமச்சந்திரனஅ கேட்டுக் கொண்டார்.
துறைமுக ஆணைய துணைத் தலைவர் பிமல்குமார் ஜோ பேசும்போது, துறைமுகத்தில் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே தேசத்தை மேன்மைபடுத்துவதில் ஊழல்களால் வரும் தடைகள் மற்றும் நேர்மையின் முக்கியதுவத்தினையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின், கண்காணிப்பு வார விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் துறைமுக ஊழியர்களுக்காக வாசகம் எழுதுதல், கட்டுரை எழுதுதல், பேச்சுப் போட்டி, நாடகம், ஓவிய போட்டி, பாட்டு போட்டி, ரங்கோலி போட்டி என்று பல்வேறு போட்டிகளை துறைமுகத்தில் நடைபெற்றன.
துறைமுக நிர்வாககத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் துறைமுக ஊழியர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவில் துணை கண்காணிப்பு அலுவலர் பாலாஜி ரத்தினம் நன்றியுரை ஆற்றினார்.