அரசின் திட்டங்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும்.. தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ்..
அரசின் திட்டங்களை சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
HIGHLIGHTS
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு மற்றும் குறு தொழில்களை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வர்த்தக தொழில் சங்கம், சிறு, குறு தொழில்கள் சங்கம் மற்றும் தொழில்முனைவோர் சங்கங்களுடன் இணைந்து பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ஒருமுனை தீர்வு மையத்தின் இணையதள பயன்பாடு தொடர்பான பயிலரங்கம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ் முன்னிலை வகித்தார்.
பயிலரங்கை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:
வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பதுபோல் வந்தோரை நன்றாக உபசரிக்கும் ஊர் தூத்துக்குடி. தொழில் முனைவோராகும் திறமை நமது ரத்தத்திலேயே உள்ளது. ஏனென்றால் சங்க காலத்தில் இருந்தே நாம் தொழில்முனைவோராக இருந்து வருகிறோம்.
தமிழகத்தில் தற்போது சிறு, குறு தொழில் முனைவோருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதியில் ஏராளமான சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர். இதனை அதிகப்படுத்த வேண்டும். ஏனென்றால் ஏராளமானோர் வேலை கேட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.
சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை தொழில்முனைவோர் பயன்படுத்தி பொருளாதாரத்தில் தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் நாகப்பட்டினம் - கன்னியாகுமரி வரையிலான பசுமை கிழக்கு கடற்கரை சாலை தூத்துக்குடி மாவட்டத்தில் சூரங்குடி கிராமம் முதல் பெரியதாழை கிராமம் வரை அதிக தூரத்திற்கு செல்கிறது. இதனால் சாலை வழியாகவும் மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கு வசதியாக உள்ளது.
மேலும், மணியாச்சி ரயில் நிலையம் - சங்கரப்பேரி இடையே சாலை அமைக்கும் பணிகளும் விரைவில் நிறைவடையும். கோவில்பட்டியில் தொழிற்பூங்கா, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளது. சிறு, குறு தொழில்களை ஒற்றைசாளர முறையினை பயன்படுத்தி மேம்படுத்த வேண்டும்.
தொழில்முனைவோர்களுக்கு தேவையான நிலம், மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் விரைந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்முனைவோர்கள் சிறு, குறு தொழில்களை தொடங்கி வேலைவாய்ப்புகளை பெருக்கி பொருளாதாரத்தை முன்னேற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார் மற்றும் சிறு, குறு தொழில்முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.