தூத்துக்குடி மாவட்டத்தில் 1.20 கோடி பறிமுதல்-தேர்தல்அலுவலர்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழு மூலம் உரிய ஆவணங்கள் இல்லாத 1 கோடியே 20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர்கள் ஜுஜவரப்பு பாலாஜி, (தூத்துக்குடி), அஸ்வானி குமார் சௌதாரி, (விளாத்திகுளம், கோவில்பட்டி), அனில் குமார், (ஓட்டப்பிடாரம்) மற்றும் மாவட்ட எஸ்.பிஜெயக்குமார், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி நமது மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குபதிவிற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்படும் இடங்கள், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் உள்ளிட்டவைகளை தேர்தல் பொது பார்வையாளர்களுடன் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து பகுதியிலும் கொரோனா விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிப்பது என்பது குறித்தும் பார்வையிடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் 2 தொகுதியில் ஒரு பேலட் யூனிட்டும், மற்ற 4 தொகுதியில் 2 பேலட் யூனிட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. தேவையான மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் நம்மிடம் உள்ளது. பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு மூலம் இதுவரை 1 கோடியே 20 லட்சம் அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ஆய்வின்போது சப்கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், டிஆர்ஓ கண்ணபிரான், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெள்ளைச்சாமிராஜ், உதவி செயற்பொறியாளர் (மின் பணிகள்) ராமலிங்கம், உதவி பொறியாளர்கள் பாலா, தினேஷ் மற்றும் பல்வேறு அலுவலர்கள் உடன் சென்றனர்.