விவசாய பணிக்கு டெபுடேசனில் ஆள் அனுப்புங்க... கலெக்டரிடமே விவசாயி மனு
விவசாய பணிக்கு டெபுடேசனில்ஆள் அனுப்புங்க என தென்காசி மாவட்ட கலெக்டரிடம் விவசாயி மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
HIGHLIGHTS
விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் ஆட்சியர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் இருந்தால் டெபுடேசனில் விவசாய பணிக்கு அனுப்பும் படியும் அவர்களுக்கு பஞ்சப்படி ,பயணப்படி மதிய உணவுடன் உரிய கூலியும் அளிக்க தயார் என ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி மனு அளித்தார்.
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெற்கட்டும் சேவல் ஊராட்சி பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் என்பவரும் கலந்துகொண்டு ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார். அவரது மனுவை படித்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அவரது அந்த மனுவில், தனது ஊரில் நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், 100 நாள் வேலை திட்டம் பணிகள் நடைபெறுவதால் தனக்கு களை எடுப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
எனவே, ஆட்சியர் அலுவலகத்தில் உபரி ஊழியர்கள் எவரேனும் இருந்தால் அவர்களைக் களையெடுக்கும் பணிக்கு டெபுடேஷனில் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பஞ்சப்படி, பயணப்படி, மதிய உணவு ஆகியவற்றுடன் உரிய கூலியையும் கொடுக்க தான் தயாராக இருப்பதாகவும் மகேஸ்வரன் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை மிகக் கடுமையாக ஏற்பட்டுள்ள நிலையில் மகேஸ்வரனின் இந்த மனு ஆட்சியர் அலுவலக வட்டாரத்திலும், விவசாயிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விவசாய பணியை குறைத்து மதிப்பிட முடியாது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கூட விவசாய பணிக்கு பயன்படுத்தலாம் என்ற ஒரு வழிகாட்டுதலையும் விவசாயி அளித்த இந்த மனு மறைமுகமாக சுட்டிகாட்டுகிறது.