குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
ஐந்தருவியை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருவதால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. தொடர்ந்து வருகிற ௩ம்தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
அந்த வகையில் தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் தொடர்ந்து கடந்த மூன்று மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக வனப்பகுதியில் உள்ள காட்டற்றில் வெள்ளம் ஏற்பட்டு குற்றாலம் மெயின் அருவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
மேலும் குற்றாலம் மெயின் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல விடாமல் இருப்பதற்காக இரண்டு பகுதிகளிலும் சுமார் 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் இன்று மதியம் முதல் குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாகவும் இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் ஐந்தருவிகளில் குளிக்க குவிந்த வண்ணம் உள்ளனர். ஆனால் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் சீசன் முன்னதாகவே மே மாதத்தில் தொடங்கி விட்டது போன்று உள்ளது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.