இந்து அறநிலை துறைக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர்பாபு தகவல்.
இந்து அறநிலை துறைக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்..
HIGHLIGHTS
இந்து அறநிலை துறைக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர்பாபு தகவல்.
தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோவில்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். குற்றாலம் பராசக்தி கல்லூரியுடன் இணைந்த பள்ளி தனியார் கட்டடத்தில் இயங்கி வருவதை தவிர்த்து கல்லூரி வளாகத்திலேயே புதிய கட்டிடம் கட்டுவது குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியது: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றும் அதற்காக போதிய அளவு நிதி ஒதுக்கப்படும் என்றும் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, பல்வேறு மாவட்டங்களில் 12 ஆண்டுகளை கடந்தும் கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோயில்கள் குறித்து மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது . இத்தகைய கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த அரசின் பங்களிப்பாக 100 கோடி ரூபாய் செலவிடப்படும் மேலும் பலரும் கும்பாபிஷேகம் நடத்த பொருளுதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி, தனியாரின் பங்களிப்புடன் இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் அனைத்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படும். எத்தனை கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்ற விவரத்தை இம் மாத இறுதியில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிப்பார்.
ஆக்கிரமிப்பு செய்துள்ள கோவில் நிலங்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 81 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.