அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி பேட்டி
இலங்கை தமிழர்கள் தொடர்பாக புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்
HIGHLIGHTS
இந்து மக்கள் உட்பட அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும்.அதற்கான முயற்சியை எடுப்பது என்னுடைய கடமை. தமிழக முதல்வரை விரைவில் சந்திப்பேன். இலங்கை தமிழர்கள் தொடர்பாக புத்தகம் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளேன் என்றார் வாழும் கலை அமைப்பின் தலைவர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி .
புதுக்கோட்டையிலுள்ள புவனேஸ்வரி அவதூத வித்யாபீடம் இந்தியாவில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், கோயில் சாதுர்மாஸ்ய விரத அனுஷ்டானம் ஹோமம் 60 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜீ இன்று ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தினார். இதன் பின்னர் திருப்பணிகள் நடக்கும் இடத்தை பார்வையிட்டு ராஜ கோபுர பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தார்.கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜீ பேசியதாவது: தற்போது கொரோனா காலம் என்பதினால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோயில்லாமல் வாழ யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை தினந்தோறும் செய்ய வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து கவனத்துடன் கூர்ந்து கவனித்து வருகிறோம்.
இலங்கை தமிழர் குறித்து விரைவில் புத்தகம் ஒன்று வெளியிட உள்ளேன்.தமிழகத்தில் இந்து மக்கள் உட்பட அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும்.அதற்கு என்னுடைய முயற்சிகளை மேற்கொள்வேன் தமிழக முதல்வரை விரைவில் சந்திப்பேன் அடுத்த முறை தமிழகத்திற்கு வரும் போது தமிழக முதல்வரை சந்திப்பேன் என்றார்.