சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம் செய்ய திருச்சிக்கு அனுப்புவைப்பு
நாமக்கல் அருகே, விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்காக, திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
HIGHLIGHTS
மோகனூர் அருகில் உள்ள வடக்கு சீத்தபட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல் (61). அவரது மகன் பிரகாஷ் (26), அவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு 8.30 மணிக்கு, சீத்தப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே பிரகாஷ் தனது டூ வீலரில் மோகனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா முதலிப்பட்டிபுதூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (38), என்பவர் எதிர் திசையில் தனது டூ வீலரில் வந்துகொண்டிருந்தார். சீத்தப்பட்டி அருகே இரண்டு டூ வீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகாஷ் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தனர். பிரகாசின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் விரும்பினார்கள். இதையடுத்து அவரது உடல் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மோகனூர் போலீஸ் எஸ்எஸ்ஐ முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.