திருச்சி அருகே சிறுத்தையிடம் கடிபட்ட 2 பேர் நாமக்கல் மருத்துவமனையில் அனுமதி
திருச்சி அருகே சிறுத்தை கடித்ததில் படுகாயம் அடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே சிறுத்தை கடித்ததில் படுகாயம் அடைந்த 2 பேர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அடுத்த ஆங்கியம் கிராமத்திலில் இருத்து, கோனேரிப்பட்டி செல்லும் வழியில் கரடு உள்ளது. அப்பகுதியில் சிறுத்தை ஒன்று உலாவியதை பொதுமக்கள் ஊரில் தகவல் தெரிவித்தனர். இதையொட்டி வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
இந்த நிலையில் ஆங்கியம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி (60), ஹரிபாஸ்கர் (20) இருவரும் மலைக்கரட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பாய்ந்த சிறுத்தை ஹரிபாஸ்கரை தாக்கியது. மேலும் துரைசாமியையும் கடித்தது. சிறுத்தை கடித்ததால் படுகாயம் அடைந்த 2 பேரும் திருச்சி மாவட்டம், தா.பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள், மேல் சிகிச்சைக்காக, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் கிடைத்ததும் நாமக்கல் வனச்சரகர் பெருமாள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை தந்து சிகிச்சை பெற்று வருபர்களிடம் விசாரணை நடத்தினார்.
ஆங்கியம் பகுதியில் கரடு அமைந்துள்ள இடம், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மற்றும் திருச்சி மாவட்டப்பகுதிக்கு இடையில் அமைந்துள்ளது. இதையொட்டி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தையின் நடமாடத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முடியுமா அல்லது கோவை கால்நடை மருத்துவ அலுவலரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதா என வனத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆங்கியம் பகுதியில் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் மக்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.