நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 420 மூட்டை பருத்தி ஏலம் மூலம் விற்பனை
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில், ஏல விற்பனைக்காக விவசாயிகள் கொண்டுவந்த பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான, 420 மூட்டை பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்சிஎம்எஸ்) உள்ளது. இந்த சங்கத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல், மோகனூர், வளையப்பட்டி, எருமப்பட்டி, பவித்திரம், வரகூர், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்வார்கள்.
திருச்செங்கோடு, கொங்கனாபுரம், பள்ளிபாளையம், ஈரோடு, அவிநாசி, திண்டுக்கல், வேடசந்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்வார்கள். இன்று 18ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத்தம் 420 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
நேரடி ஏலத்தில் ஆர்சிஎச் ரக பருத்தி ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 7,179 முதல் ரூ. 7,789 வரை விற்பனையானது. மட்ட ரக கொட்டு பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4,116 முதல் ரூ. 5,017 வரை விற்பனையானது. மொத்தம் 420 மூட்டை பருத்தி ரூ. 10.50 லட்சம் மதிப்பில் நேரடி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu