8 தாலுக்கா ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்: 79 மனுக்களுக்கு உடனடி தீர்வு
நாமக்கல் மாவட்டத்தில், 8 தாலுக்காக்களில் நடைபெற்ற ரேசன்கார்டுதாரர்கள் குறைதீர் நாள் முகாமில், 81 மனுக்கள் பெறப்பட்டு,79 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோகத் திட்டத்தின் மூலம், ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கேட்டல், மொபைல் போன் பதிவு, ரேசன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்ளை, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளுதல் மற்றும் பொது விநியோக திட்ட சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேசன் கார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், மாதம் தோறும், இரண்டாவது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
அதன்படி, பொது வினியோத்திட்ட ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் நாள் முகாம், மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம் என 8 தாலுக்கா வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடந்தது.
நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு, வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் திருத்தம், புதிய ரேசன் கார்டு கேட்டல் என, 20க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் கூறும்போது, மாவட்டம் முழுவதும் நடந்த குறைதீர் முகாமில், 81 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 79 மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. 2 மனுக்கள் ஆய்வில் உள்ளது என்று கூறினார்.