ஆக்கிரமிப்பு குடிசை அகற்றப்பட்டதை கண்டித்து கலெக்டர் ஆபீசில் தர்ணா
மோகனூர் அருகே, ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
HIGHLIGHTS
மோகனூர் ஒன்றியம், மாடகாசம்பட்டி பஞ்சாயத்து, ராசாம்பாளையம் கிராமத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். ஒரு சிலருக்கு மட்டுமே தகுதியின் அடிப்படையில் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பட்டா இல்லாதவர்களும் குடிசை அமைத்து பட்டா கோரி வந்தனர்.
இந்நிலையில், கலெக்டர் உத்தரவின்பேரில் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், ராசாம்பாளையம் சென்று, ஆக்கிரமிப்பில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்ற முற்றபட்டனர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள், பொக்லைன் வாகனத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மோகனூர் தாசில்தார் தங்கராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, ஆக்கிரமிப்பு பகுதி பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், பேச்சு நடத்தி சமரசம் செய்தனர். இதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறி கலைந்து சென்றனர்.
நாமக்கல் சப்கலெக்டர் கோட்டைக்குமார் கூறியதாவது: ராசாம்பாளையம் கிராமத்தில் 4 குடும்பத்தினர் மட்டுமே அரசின் இலவச பட்டா பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள். அவர்களுக்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டு விட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் தனித்தனியே குடிசை போட்டு, பட்டா கேட்கின்றனர். அதனால் ஆக்கிரமிப்பில் இருந்த குடிசைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, தகுதியின் அடிப்படையில் மேலும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.