கோம்பை நகர் பகுதியை 2 ஆக பிரிக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டு கோம்பைநகர் பகுதியை பிரிக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டு கோம்பை நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனு அளித்தனர், அதில் கூறியுள்ளதாவது:
திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கோம்பைநகர் பகுதியை இரண்டாக பிரித்து, ஒரு பகுதியை நெசவாளர் காலனியில் இணைப்பதாகவும், மற்றொரு பகுதியை 3-வது வார்டு கைலாசம்பாளையம் வேல்முருகன் நகர் பகுதியோடு இணைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.
கோம்பைநகர் பகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,000-க்கும் மேல் உள்ளது. முன்புபோல் சேலம் ரோடு பகுதியையும் சேர்த்தால் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1,500-க்கு மேல் வரும். இது சம்பந்தமாக ஏற்கனவே முதலமச்சரின் தனிப்பிரிவு, தேர்தல் அதிகாரி, உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் மனு அளித்தோம். எனவே எங்களின் கோரிக்கைகயை ஏற்று கோம்பை நகர் பகுதியை 3வது வார்டுடன் இணைக்கும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.
மேலும், கோம்பை நகர் பகுதியை இரண்டாக பிரிக்காமல், கோம்பை நகர் மற்றும் சேலம் ரோடு பகுதிகளை ஒன்றாக இணைத்து தனி வார்டாக அறிவிக்க வேண்டும். அல்லது கோம்பை நகர் முழுவதையும், தற்போது இருப்பது போல் நெசவாளர் காலனி பகுதியுடன் ஒன்றாக இணைத்து 5-வது வார்டு பகுதியிலேயே தொடர வேண்டும் என, மனுவில் தெரிவித்துள்ளனர்.