திட்டப்பணிகளை குறித்தகாலத்தில் முடிக்க கண்காணிப்பு அலுவலர் அட்வைஸ்
திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று, நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
வேளாண்மைத் துறையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வேளாண் வட்டாரத்திலும் ஒரு குறிப்பிட்ட பகுதியினை தேர்வு செய்து மண் பரிசோதனை செய்திட வேண்டும். மண்பரிசோதனை செய்து விவசாயம் மேற்கொண்டதால், விளைச்சலில் சம்மந்தப்பட்ட விவசாயி அடைந்த பலன்கள் குறித்து, அவரது விவசாய நிலத்திற்கு பிற விவசாயிகளை அழைத்து வந்து காண்பித்து, மண் பரிசோதனை முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள செய்ய வேண்டும்.
அதேபோன்று, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையினர் தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்ட பணிகளை, குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி முடிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கும்படி உத்திரவிட்டார்.