நாமக்கல் மாவட்டத்தில் 275 போலீசார் கவுன்சலிங் மூலம் டிரான்ஸ்பர்
நாமக்கல் மாவட்டத்தில் கவுன்சலிங் மூலம் ஒரே நாளில் 275 போலீசாருக்கு, விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு என 4 போலீஸ் சப் டிவிசன்கள் உள்ளன. அவற்றில் 27 சட்டம் ஒழுங்கு, 6 போக்குவரத்து, 4 அனைத்து மகளிர் என மொத்தம் 37 போலீஸ் நிலையங்கள் உள்ளன. ஒரே போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய சிறப்பு எஸ்.ஐக்கள் மற்றும் போலீசார், இடமாற்றம் செய்வதற்கான கவுன்சலிங், நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி. சரோஜாகுமார் தாக்கூர் தலைமை வகித்து கவுன்சலிங்கை துவக்கி வைத்தார். தொடர்ந்து ஏடிஎஸ்பிக்கள் சுஜாதா, செல்லபட் பாண்டியன் மற்றும் டி.எஸ்பிக்கள் முன்னிலையில் கவுன்சலிங் நடந்தது. இந்த கவுன்சலிங்கில், ஒரே சப்டிவிசனில், 6 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால், அந்த டிவிசனுக்கு செல்லக்கூடாது என்ற விதிமுறைக்கு உட்பட்டு, இடம் மாறிச்செல்ல விருப்பம் உள்ள போலீசார், தாங்கள் செல்ல விரும்பும் 3 போலீஸ் ஸ்டேசன்களை குறிப்பிட்டு விண்ணப்பத்திருந்தனர்.
கவுன்சலிங்கில் நடந்த கலந்தாய்வில், முன்னுரிமை அடிப்படையில் அழைக்கப்பட்டு, தாங்கள் விரும்பிய ஸ்டேசன்களுக்கு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், விருப்பப்பட்ட இடம் காலியாக இல்லாத பட்சத்தில், காலியாக உள்ள போலீஸ் ஸ்டேசன் கேட்டு பெற்று, இடம்மாறி சென்றனர். மாவட்டம் முழுவதும், ஒரே நாளில் 275 சிறப்பு எஸ்.ஐ., மற்றும் போலீசாருக்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது. முன்பு அதிகாரிகள் விருப்பத்துக்கு ஏற்ப இடமாற்றம் செய்யப்பட்டு வந்தநிலையில், தற்போது விரும்பிய ஸ்டேசனுக்கு செல்லும் வகையில் கவுன்சலிங் நடத்தப்பட்டது, போலீசார் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.