நாமக்கல் மாவட்ட தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி
நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் உள்ள 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு பணியில்3 ஆயிரத்து 328 பேர் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் தேர்தல் அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி நடைபெற்றது.
இதேபோல் பாண்டமங்கலம், வெண்ணந்தூர் மற்றும் அத்தனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூர், நாமகிரிப்பேட்டை, பரமத்தி மற்றும் சீராப்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள், மல்லசமுத்திரம் மற்றும் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், படைவீடு மற்றும் ஆர்.புதுப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், பட்டணம் மற்றும் பொத்தனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சம்மந்தப்பட்ட டவுன் பஞ்சாயத்து தேர்தலில் பணிபுரியும் அலுவலர்களுக்கான 2ம் கட்டபயிற்சி நடைபெற்றது.
ஆலாம்பாளையம் டவுன் பஞ்சாயத்திற்கு பள்ளிபாளையம் எஸ்.பி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிள்ளாநல்லூரில் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி, ப.வேலூரில் கந்தசாமி கண்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என மொத்தம் 19 டவுன் பஞ்சாயத்துக்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் மின்னணு எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவிகளின் செயல்பாடுகள், அவற்றை பயன்படுத்தும் முறை, வாக்குப்பதிவு இயந்திரத்தினை கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைப்பது குறித்து மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர். மேலும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது, தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்தல், வாக்குச்சாவடியில் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 3ம் கட்ட பயிற்சி வருகிற 18ம் தேதி நடைபெறும்.