நாமக்கல் பைனான்ஸ் அதிபர் வீட்டில் பணம் பதுக்கல்: அதிகாரிகள் பறிமுதல்
நாமக்கல் பைனான்ஸ் அதிபர் வீட்டில், தேர்தலுக்காக கத்தை கத்தையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
தேர்தல் கமிஷன் உத்தரவின்பட்டி, உரிய ஆவணம் இன்றி ஒரு நபர் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேலாக பணம் எடுத்துச் சென்றால், தேர்தல் பறக்கும்படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து அதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். பின்னர் பணத்தின் உரிமையாளர் அதற்கான ஆவணத்தை அளித்து பணத்தை திரும்பிப் பெறலாம்.
இந்த நிலையில், நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள இ.பி காலணி பகுதியில் வசிப்பவர் செல்லப்பன் (60). எல்.பி.ஜி டேங்கர் லாரி அதிபரான இவர், பைனான்ஸ் நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் அரசியல் கட்சி சார்பில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித் துறையினருக்கும், தேர்தல் பறக்கும் படையினருக்கும் இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சுமார் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் செல்லப்பனின் வீட்டிற்குள் திடீரென நுழைந்து, அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில், செல்லப்பனில் வீட்டில் 5க்கும் மேற்பட்ட கட்டைப்பைகளில் ரூ. 500 நோட்டுக்கட்டுகள் கொண்ட ஏராளமான பண்டில்கள் ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ரூ. 80 லட்சம் வரை பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோதனை முடிவில் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என தெரியவரும்.
கடந்த வாரம் நாமக்கல் நகரில் பஸ் அதிபர் வீட்டில் உரிய ஆவணம் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கனக்கான ரூபாய் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர். அது சம்மந்தமான விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் நகரில் மற்றொரு வீட்டில் பணம் பிடிபட்டுள்ளது, நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.