நாமக்கல் காய்கறி மொத்த விற்பனை சந்தையை பழைய இடத்திற்கே மாற்றக்கோரிக்கை
மழையால் சேதமடைந்துள்ள, நாமக்கல் காய்கறி மொத்த வியாபார சந்தையை பழைய இடத்திற்கே மாற்றித்தர வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர், கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
HIGHLIGHTS
கொரோனா ஊரடங்கால் நாமக்கல், திருச்செங்கோடு ரோடு, வாரச்சந்தை வளாகத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மொத்த விற்பனை சந்தை, கடந்த சில வாரங்களாக நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரமாக அடிக்கடி மழை பெய்ததால், களிமண்ணால் ஆன அந்த பள்ளி மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மைதானத்திற்குள் வியாபாரிகள் செல்வதற்கும், வாகனங்கள் போகவரவும் மிகவும் சிரமாக உள்ளது. மேலும் அந்த இடத்தில் வியாபாரிகள் தற்காலிக பந்தல் அமைத்து, அங்கு மீதமாகும் காய்கறிகளை இருப்பு வைப்பதால், மழை நேரங்களில் காய்கறிகள் அதிகளவில் சேதம் அடைந்து, பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பல வியாபாரிகள் அங்கு வருவதில்லை.
காய்கறி மொத்த வியாபார சந்தையை மீண்டும் வாரச்சந்தை வளாகத்திற்கே மாற்றித்தரக்கோரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார், நகர காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் மற்றும் 30க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள், கலெக்டர் ஸ்ரேயாசிங் மற்றும் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மார்க்கெட் பகுதியை நேரில் ஆய்வுசெய்த பிறகு இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார்.