நாமக்கல்லில் வரும் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்
நாமக்கல்லில் வருகிற 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல்லில் வருகிற 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வருகிற 11-ந் தேதி சனிக்கிழமை, காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) நடைபெற உள்ளது.
ஏற்கனவே பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்து கொள்ளக் கூடிய கிரிமினல் வழக்குகள், செக் தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன்கள், கல்விக் கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள் அடங்கிய உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்துவரி தொடர்பான வழக்குகள் இதில் விசாரிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே பொதுமக்கள் நிலுவையில் உள்ள குறிப்பிட்ட வழக்குகளை சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டு பயன்பெறலாம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.