நாமக்கல்: மாடு திருட்டில் ஈடுபட்ட பெண் உட்பட 3 பேர் கைது - 3 மாடுகள் மீட்பு
நாமக்கல் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகளை திருடி விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து 3 மாடுகளை மீட்டனர்.
HIGHLIGHTS
நாமக்கல் பகுதியில் இரவு நேரங்களில் மாடுகளை திருடி விற்பனை செய்த பெண் உட்பட 3பேரை போலீசார் கைது செய்து 3 மாடுகளை மீட்டனர்.
நாமக்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, போதுப்பட்டி மற்றும் வகுரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள, பால் உற்பத்தியாளர்கள் தங்களின் மாடுகளை வீடுகளுக்கு அருகில் உள்ள கொட்டகைகளில் கட்டி வைத்து பராமரிப்பது வழக்கம். சமீப காலமாக அப்பகுதியில், அடிக்கடி மாடுகள் திருட்டுப் போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையொட்டி நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில், போலீசார் மாடுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை கண்காணித்து விசாரனை செய்தனர். அப்போது, வகுரம்பட்டியில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ ஒன்றறை போலீசார் மடக்கி விசாரித்தனர். அதில் இருந்த இருவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வாகனத்துடன், போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் ராசிபுரம் அணைப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி, அவரது மகன் முத்துக்குமார், மருமகள் ரேவதி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் இரவு நேரங்களில் வாகனத்தில் சென்று ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் கொட்டகைகளில் உள்ள மாடுகளை திருடி வாகனத்தில் ஏற்றிச் சென்று ராசிபுரம், புதன்சந்தை பகுதிகளில் உள்ள மாட்டுச் சந்தைகளில் அவற்றை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து பெரியசாமி, ரேவதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாடுகளை கடத்த உதவியாக இருந்த ஆட்டோ டிரைவர் வருதராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். முத்துக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 3 மாடுகள் நாமக்கல் போலீஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.