மல்லசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு..
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், திருவள்ளுவர் சிலையை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு, சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி, திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் சிலை அமைத்துள்ளார். ஆர்ப்பரிக்கும் கடல் நடுவில் அமைந்துள்ள அந்த சிலை தற்போது இந்திய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை காண வெளி மாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் கூட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். திருவள்ளுவரின் புகழை உலகம் அறியச் செய்தது மறைந்த முதல்வர் கரணாநிதியின் இந்த முயற்சியாகும். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் 1,330 குறள்கள் உள்ளன.
திருக்குறள் என்பது மிகச்சிறந்த உலகப் பொதுமறை. திருக்குறள் ஓர் அறநெறி. இந்த நூலில் ஒரு மனிதன் நல்ல மனிதனாக திகழ்வதற்கு தேவையான நல்லொழுக்கங்கள், வீரம், கடமை, அன்பு, நட்பு, சாதுரியம் மற்றும் திறமை உள்ளிட்ட அனைத்து பண்புகள் குறித்தும் இரு வரியில் அழகுற திருவள்ளுவர் நமக்கு வழங்கி உள்ளார்.
திருக்குறள் அனைவரும் கட்டாயம் படிக்கப்பட வேண்டிய ஒரு நூல். திருக்குறள் தமிழருக்கு பெருமை சேர்க்கக்கூடிய நூல். இந்தி சிறிய ஊரில் அமைந்துள்ள இப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளதை பெரிதும் பாராட்டுகிறேன். இந்த சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார். திருக்குறளை இயற்றிய வான் புகழ் கொண்ட அய்யன் திருவள்ளூர் சிலையை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் துபாய்க்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர். இதில் நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர். இருவரில் ஒருவர் இந்த மல்லசமுத்திரம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவி என்பது இப்பகுதி மக்களுக்கு பெருமை. இதே போன்று அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் கல்வி பயின்று எதிர் காலத்தில் நல்ல அரசு அலுவலர்கள், சட்ட வல்லுநர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்களாக வர வேண்டும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் திருமலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.