குமாரபாளையம் விசைத்தறி அதிபரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி
விசைத்தறி உரிமையாளர் மிரட்டுவதாகக் கூறி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, வெப்படை அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி நாகம்மாள் (41). ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள விசைத்தறி பட்டறையில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் விசைத்தறி பட்டறை உரிமையாளரிடம் ரூ.1.60 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்திற்கான தவணையை, ஓரிரு மாதங்கள் மட்டுமே செலுத்திய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, நாகராஜ் மனைவியை பிரிந்து சென்றுவிட்டார்.
கணவர் இல்லாததால், தனது மகனுடன் விசைத்தறி பட்டறையில் வேலை பார்த்துக்கொண்டே நாகம்மாள் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில், விசைத்தறி உரிமையாளர், நாகம்மாளிடம் கடன் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டு மிரட்டியதாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நாகம்மாள் மனுவை அளித்துவிட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே சுற்றி வந்துள்ளார். மாலை 3:30 மணியளவில், திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் அவரை தடுத்து, நல்லிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.