நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா: 2அமைச்சர்கள் சாமி தரிசனம்
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் 2 அமைச்சர்கள் சாமி தரிசனம்
HIGHLIGHTS
ஆஞ்சயநேர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அமைச்சர்கள் சேகர்பாபு, மதிவேந்தன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் கோட்டை பகுதியில் புரான சிறப்புப் பெற்ற, ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சாந்த சொரூபியாக கரம் கூப்பி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம், மூலம் நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறும். இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 7வது ஆண்டாக ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு வடை பிரசாதம் வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரில் கூட்ட நெரிசலை சமாளிக்க போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.