பொட்டிரெட்டிப்பட்டியில் 29ம் தேதி ஜல்லிக்கட்டு: மைதானத்தை ஆய்வு செய்த எம்பி
பொட்டிரெட்டிப்பட்டியில் 29ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் பார்வையிட்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுக்கா, பொட்டிரெட்டிபட்டியில் வருகிற 29ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனி பாதை அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் பெரிய இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டிருப்பதையும், காளைகள் வெளியேறும் இடத்தில், மைதானத்தை சுற்றிலும் இரண்டடுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு, காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்கள்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவரும் பணியினையும், ஆம்புலன்ஸ் வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், பார்வையாளர்கள் அமருவதற்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் பார்வையிட்டார்கள்.
நாமக்கல் சப் கலெக்டர் மஞ்சுளா, டிஎஸ்பி சுரேஷ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், பிஆர்ஓ சீனிவாசன், சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.