நாமக்கல் மாவட்டத்தில் 3.41 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே போடவில்லை
நாமக்கல் மாவட்டத்தில் 3.41 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியே போடவில்லை என கலெக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3.41 லட்சம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்று கலெக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 13,84,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி (75.35 சதவீதம்) 10,43,103 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி (43.83 சதவீதம்) 6,06,787 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 3,41,197 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர். இதுவரை நடந்த 13 மெகா தடுப்பூசி முகாம்களில் 5,13,473 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வருகிற 11ம் தேதி மாவட்டம் முழுவதும் 14ம் கட்ட மொகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மொத்தம் 513 சிறப்பு முகாம்களில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவர்களும் முதலாம் தவணை போட்டு முடித்து, இரண்டாம் தவணை நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா நோய் தொற்றின் வீரியம் குறைவாக காணப்படும்.
கொரோனா நோய்த்தொற்று இன்னும் முற்றிலும் ஒழியவில்லை. தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.