நாமக்கல்லில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: 161 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 161 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 9 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் 115 மாணவ, மாணவிகள் தங்களுடைய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இதன்படி உணவு பொருட்கள், நம்மை சூழ்ந்து இருக்கும் உயிரின உலகம், மனிதர்கள் சிந்தனைகள் மற்றும் இயங்கு பொருட்கள், கருவிகள் இயங்கும் விதம், இயற்கை கோட்பாடுகள், இயற்கை வளங்கள் என பல்வேறு வகையான தலைப்புகளின் கீழ் மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றை கலெக்டர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டார். ஒவ்வொரு தலைப்பிலும் 3 சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தன். நாளை 31ம் தேதியும் இக்கண்காட்சி நடைபெற உள்ளது, முன்னதாக சிஇஓ மகேஸ்வரி வரவேற்றார். டிஇஓக்கள் ராமன், விஜயா, உதவி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.