வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விபரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
நாமக்கல் மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளவர்கள், அவர்கள் குறித்த முழு விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள், ரிக் உரிமையாளர் மற்றும் ஒப்பந்த முறையில் பணியாளர்களை வழங்கும் நிறுவனத்தினருக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல் பல்வேறு தொழில்களில் முன்னோடி மாவட்டமாக விளங்குகின்றது. அதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வருகை தந்து இங்கு பணிபுரிந்து வருகின்றனர். தொழில் நிறுவனத்தினர், வணிக நிறுவத்தினர், செங்கல் சூளை உரிமையாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள், ரிக் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும், தங்களிடம் பணிபுரியும் வெளி மாநில பணியாளர்களின் விபரங்களை, கட்டாயம் பதிவு செய்து, பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து பணியாளர்களை பணிக்கு அமர்த்தும்போது, அவர்கள் குறித்த புகைப்படம், முகவரி, வயது, குடும்பத்தினரின் விபரங்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய பதிவேடுகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 14 வயது நிரம்பியிருந்தாலும், 18 வயதுக்கு குறைவான நபர்களை பணிக்கு அமர்த்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார்.
நாமக்கல் எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி, சப் கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.