நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 50 கிலோவாட் சோலார் மின் உற்பத்தியை துவக்கி வைத்த கலெக்டர்
நாமக்கல் கலெக்டர் அலுவலக மேல்தளத்தில் 50 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் மின்சக்தி அமைப்பினை கலெக்டர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம், மரபுசாரா எரிசக்தியினை மேம்படுத்தும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டினை அதிகப்படுத்தவும், மரபுசாரா எரிசக்தி பயன்பாடுகள் குறிப்பாக சோலார் மின்சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனங்களை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலக மேல்தளத்தில் (ரூப் டாப்) ரூ.20 லட்சம் மதிப்பில் 50 கிலோ வாட் திறன் கொண்ட சோலார் மின்சக்தி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. அதை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார். இதன்மூலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து மின்சாதனங்களும், சோலார் மின்சக்தி மூலம் இயங்குவது மட்டுமல்லாமல், மீதமுள்ள மின்சாரம் மின்வாரியத்திற்கு அனுப்பி சேமிக்கப்படும் .
இந்த சோலார் பவர் அமைப்பினை நிறுவும் அரசு அலுவலங்களில் மின்சாரம் சேமிக்கப்பட்டு, மின்கட்டணம் மிகவும் குறையும். இத்திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 50 கிலோவாட், அரசு போக்குவரத்துகழக டெப்போவில் 15 கிலோவாட் சோலார் மின்சக்தி அமைப்பு முன்மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், டிஆர்ஓ கதிரேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்ரமணியன், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவிப்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.