சந்திரயான்–-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் நீதிபதி மனைவி
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நீதிபதியின் மனைவி கவுரிமணி, சந்திரயான்-3 திட்டத்தில் டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்டு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
HIGHLIGHTS
இந்தியாவின் சந்திரயான்-3 வின்கலம், சந்திரனில் கால் பதித்து, சரித்திர சாதனை படைத்துள்ளது. இது உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த வரலாற்று சாதனையால், ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொண்டுள்ளனர். இந்த சந்திராயான்–3 திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த வீரமுத்துவேல் செயல்பட்டுள்ளார்.
அதேபோல், இந்த திட்டத்திற்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் உபயோகம் செய்யப்பட்டுள்ளது. சந்திரயான்–3 நிலவில் கால்பதித்ததை அடுத்து, நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அடுத்த குன்னமலை, சித்தம்பூண்டி, ராமதேவம் கிராம மக்கள், கேக் வெட்டி, தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இந்தத் திட்டத்தில் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனர் சங்கரன் மற்றும் திட்ட இயக்குனர் வீரமுத்து ஆகியோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அதேபோல், சந்திரயான்–3 திட்டத்தில், பூமியில் இருந்து ராக்கெட் மூலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள், சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர், சந்திரனில் கால் பதிப்பதற்கான லேண்டர் மற்றும் சந்திரனை ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை மிக முக்கியமானது. இவை மூன்றையும், பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும், டெலி கமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்டுள்ளவர், திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்த கணக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கவுரிமணி (50) என்ற பெண் ஆவார். மதுரை தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரியில், தொலை தொடர்பு பொறியியலில் எம்.இ. பட்டம் பெற்ற இவர், கடந்த 23 ஆண்டுகளாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், செயற்கைக்கோள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் டாக்டர் ராமராஜ், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.