கவர்னர் நியமனம்: கே.எஸ்.அழகிரிக்கு பாஜக துணைத்தலைவர் துரைசாமி கண்டனம்
தமிழக கவர்னர் நியமனம் குறித்து, விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு, பாஜக துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
HIGHLIGHTS
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழக பாஜக துணைத்தலைவரும், முன்னாள் சட்டசபை துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி, இன்று நாமக்கல் வந்தார். பின்னர், அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு மாநிலத்தின் கவர்னராக அரசியல்வாதிகளையோ, ஓய்வு பெற்ற அதிகாரிகளையோ நியமனம் செய்யலாம். இது சம்மந்தமாக அரசியல் சட்டத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. தமிழக கவர்னராக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாகாலாந்து மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியுள்ளார்.
புதிய கவர்னருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், கவர்னர் நியமனம் குறித்து காங்கிரஸ் தலைவர் அழகிரி விமர்சனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, தமிழக முதல்வருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் புலம்பி வருவது கண்டனத்திற்குரியதாகும். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, உள்துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற குரானாவை தமிழக கவர்னராக நியமனம் செய்திருந்தனர்.
இந்தியாவில் பல்வேறு கவிஞர்கள் சுதந்திர தாகத்திற்காக பாடல்களை இயற்றியிருந்தாலும், பாரதியார் மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட தியாகியாக இருந்துள்ளார். ஆயுதம் செய்வோம் என்ற பாடலை எழுதி வெள்ளையனை எதிர்த்து போராட வேண்டும் என்ற வேட்கையை இளைஞர்களிடம் அவர் தூண்டியுள்ளார். தற்போது, வட மாநிலங்களில் நடைபெறும் விழாக்களில் கூட பாரதியார் குறித்த சம்பவங்களை பிதமர் மோடி எடுத்துரைத்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார். எனவே தமிழக அரசு பாரதியார் நூற்றாண்டு விழாவை மேலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அவர் கூறினார்.