சத்துணவு திட்டத்தில் ஆவின் பால்: உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
சத்துணவு மையங்களில், குழந்தைகளுக்கு ஆவின் பால் வழங்க, பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
HIGHLIGHTS
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின், மாநில குழு கூட்டம், நாமக்கல்லில் மாநிலத் தலைவர் முனுசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் முகமது அலி பால் உற்பத்தியாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் பால் கொள்முதல் விலை கடந்த 2019 நவம்பரில் உயர்த்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் மாடுகளுக்கு தேவையான தீவனப் பொருட்களின் விலை பட மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ 10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ 42 ம் எருமைப் பாலுக்கு ரூ 52 ம் அறிவித்திட வேண்டும்.
பால் உற்பத்தியாளர்களுக்கு பண பாக்கி ரூ.400 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். ஆரம்ப சங்கங்களில் பால் கொள்முதல் செய்யும் போது பாலின் அளவையும், தரத்தையும் உற்பத்தியாளர்களுக்கு குறித்துக் கொடுக்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் கிளையின் தீர்ப்பை அமலாக்க வேண்டும் . ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 1502 அரசு கால்நடை மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதை உடனடியாக திரும்பப் பெற்று மீண்டும் பணி அமர்த்த வேண்டும் .
குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் இணைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பால் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு ரூ 3 விதம் குறைந்தால் ஆவினுக்கு வருடத்திற்கு ரூ300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரி செய்ய தமிழக அரசு ஏற்றுக் கொண்டு மானியம் வழங்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற பிப்ரவரி மாதம், சென்னை கோட்டை முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில பொருளாளர் சங்கர், நிர்வாகிகள் ராமநாதன். ராமசாமி, செல்லதுரை, முத்துசாமி, சதாசிவம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில்கலந்துகொண்டனர்.