நாமக்கல் மாவட்டத்தில் 7 நாட்கள் தேசிய குடற்புழு நீக்க முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாமில் 7.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை மூலம் நடைபெறவுள்ள தேசிய குடற்புழு நீக்க முகாமில் 7.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் வருகிற 13, 16 மற்றும் 18ம் தேதிகளில் முதல் சுற்று மற்றும் 20, 23, 25 ஆகிய தேதிகளில் இரண்டாம் சுற்றும் 27ம் தேதி விடுபட்ட குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20-30 வயது வரை உள்ள காப்பிணி அல்லாத பெண்களுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) இரண்டு சுற்றுகளாக வழங்கப்படும். அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இக்குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5,89,401 குழந்தைகளுக்கும், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத பெண்கள் 1,53,830 நபர்களுக்கும் என மொத்தம் 7,43,231 பேருக்கு குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இம்மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு குடற்புழுவால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்பட்டு, ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படும்.
மேலும் குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவர்களின் பள்ளி வருகை பாதிப்பு தவிர்க்கப்படும். இதனால் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.