100 சதவீத வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த கோலப்போட்டிகள்
நாமக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்குப்பதிவு பயிற்சி என பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன .
இதன் ஒருபகுதியாக 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு குறித்து பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்றது. பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பல்வேறு வண்ணங்களில் கோலங்களை போட்டனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மெகராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இறுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.