பேருந்துகள் வராததால் மாணவர்கள் சாலை மறியல்
நாகூரில் வழக்கமாக வருகின்ற பேருந்துகள் வராத காரணத்தால், காத்திருந்த மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
HIGHLIGHTS
நாகை மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் மாலையில் பள்ளி கல்லூரி முடித்த மாணவ மாணவிகள், கூலி தொழிலாளர்கள் பேருந்து மூலம் வீடு திரும்புவார்கள்.
நாகூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக திருவாரூர் செல்ல கூடிய 3 பேருந்துகளுக்கு வழக்கம்போல நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல வருகின்ற பேருந்துகள் வராத காரணத்தால் இரவு 8 மணி வரையும் காத்திருந்த மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கூடுதல் பேருந்தை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டுமென மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாகை அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து மூன்று பேருந்துகள் வர வைக்கப்பட்டதால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் போராட்டம் காரணமாக நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.