அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு நிறுத்துகிறது: எம்.ஆர். விஜயபாஸ்கர்
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை நிறுத்தும் நோக்கத்தில் திமுக அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான இன்று தாந்தோன்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக சார்பில் 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தானேஷ் (எ) முத்துக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சலுகை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் நகைக் கடன் தள்ளுபடிக்கு பல நிபந்தனை விதித்துள்ளது. கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது 6 மணி நேரம் கூட வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக ஆட்சியில் நிறுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், க.பரமத்தி ஒன்றிய குழு உறுப்பினர், சித்தலவாய் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர் 12 என மொத்தம் 15 உள்ளாட்சி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. நேற்று வரை 21 பேர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் விறுவிறுப்பாக வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.