ரேஷன் அரிசி தரம் குறைவு: பணியாளர்கள் 10 பேர் சஸ்பெண்ட்?
காஞ்சிபுரத்தில், தரம் குறைந்த அரிசியை விநியோகித்ததாக எட்டு நியாய விலை கடை விற்பனையாளர் மற்றும் சங்க செயலாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
HIGHLIGHTS
உள்ளாட்சி தினத்தையொட்டி, கடந்த 24ஆம் தேதி சிறப்பு கிராம சபைக்கூட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தை சேர்ந்த செங்காடு கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதில், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஒரு பெண்மணி, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசி மிகவும் தரமற்றதாக உள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த முதல்வர், மறுநாள் நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதன்மை அலுவலர் அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் இருந்து அரிசி மாதிரி கொண்டு வரப்பட்டது. நேற்று, மீண்டும் ஆய்வு மேற்கொண்ட குடிமைப்பொருள் அலுவலர்கள், காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை மற்றும் வாலாஜாபாத் நியாயவிலை கடைகளில், அரிசியின் தரத்தை ஆராய்ந்த போது அது தரமானதாக இல்லை என கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து, இதை கண்காணிக்க தவறிய கூட்டுறவு வங்கி செயலர்கள் இருவர் மற்றும் பொருட்களை வழங்கிய எட்டு விற்பனையாளர் ஆகிய 9 பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதைக்கண்ட கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து, இன்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். தரமற்ற அரிசியை வினியோகிக்கும் பணியிணை கண்காணிக்கத் தவறிய அலுவலரை பணியிடை நீக்கம் செய்யாமல், ஊழியரை பணி நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.