பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினர் மச்சேந்திரநாதன் குழுவை சந்திக்க ஏற்பாடு
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் மச்சேந்திரநாதன் குழுவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
HIGHLIGHTS
பரந்தூர் விமான நிலைய போராட்டக்கார குழுவினர் மச்சேந்திரநாதன் குழுவை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், மேலேறி, சிங்கிள்பாடி உள்ளிட்ட 13 கிராமங்களை ஒன்றிணைந்து 4750 ஏக்க நிலப்பரப்பில் விமான நிலையம் அமைய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து 13 கிராம மக்கள் தொடர்ந்து 456 வது நாளாக பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஐந்து முறை கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றியும், 3 முறை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் கடந்த இரண்டு முறை ஐ.ஐ.டி. பேராசிரியர் மச்சேந்திரநாதன் தலைமையில் குழுவினர், இரண்டு முறை பரந்தூர் பகுதியில் ஆய்வு செய்து விட்டு வந்த நிலையில் அவரை சந்திக்க பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிய நிலையில், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 20க்கும் மேற்பட்டோர் திடீரென மாவட்ட ஆட்சியரை சந்திக்க இன்று வந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனுடன் அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழுவினர், நீர்நிலைகளை அழிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் விமான நிலையம் அமைந்தால் பொதுமக்கள் எவ்வாறு பாதிப்பு அடைவார்கள் , என்பது குறித்தும், ஐஐடி பேராசிரியர் குழு மச்சேந்திரநாதன் சந்திக்க பலமுறை நேரம் கேட்டு கொடுக்காததால் , இன்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து பேசியதில், நாளை சென்னையில் பேராசிரியர் குழுவிடம் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக கூறினர்.
மேலும் தொடர்ந்து 456 வது நாளாக போராட்டம் நடத்தி வரும் மக்கள் பற்றி மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தீர்களா ? இல்லையா ? இந்த போராட்டத்தால் ஆளும் கட்சியினருக்கு தேர்தல் நேரங்களிலும் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு கேள்விகள் எழுப்பினோம் , தொடர்ந்து இப்போராட்டம் குறித்து அரசுக்கு தெரிவித்து வருகிறோம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்கள்.