காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு
மாமன்ற கூட்டம் தொடர்பாக துணை மேயரிடம் ஆலோசிக்கவில்லை, சில மாமன்ற உறுப்பினர்கள் துணை மேயரை மாற்றுவோம் என கூறுவதாக குற்றச்சாட்டு கூறினார்
HIGHLIGHTS
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் காலை 11 மணியளவில் மேயர் மகாலட்சுமி தலைமையில் துவங்கியது.
இந்த மாமன்ற கூட்டத்தில் முதல் முறையாக பெண்களுக்கு அதிக இடம் அளித்து பெண்ணுரிமையை பார்த்ததற்கு நன்றி தெரிவித்தல் , தீண்டாமையும் உறுதிமொழி, பிளாஸ்டிக் இல்லாத காஞ்சியை உருவாக்குதல் மற்றும் தமிழக அரசின் உத்தரவின்படி சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகள் தீர்மானங்களாக அறிவிக்கப்பட்டது.
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோதே மாநகராட்சியின் துணை மேயரான காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர் குமரகுருநாதன் மாமன்றத்திற்கு வந்து ஆணையாளரிடம், மாநகராட்சி முறையாக அரசு விதிகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி மாமன்றத்தில் கடும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து துணை மேயர் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் துணை மேயர் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறி அவையை விட்டு வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின் செய்தியாளர்கள் பேசுகையில் , தமிழக முதல்வர் கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதை அளித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயரிடம் கூட்டம் குறித்து எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. மாமன்ற உறுப்பினர்களில் சிலர் பகிரங்கமாக துணை மேயரை மாற்றுவோம் என கூறி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தார்.
முதல் கூட்டத்திலேயே வாக்குவாதம் மற்றும் துணை மேயர் வெளிநடப்பு உள்ளிட்டவை காஞ்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.