நஷ்ட ஈடு தராததால் அரசு பேருந்து ஜப்தி
விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் ஜப்தி செய்யப்பட்டது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர் ஹேமசந்திரன். இருவரும் தாம்பரத்திலுருந்து திண்டிவனம் நோக்கி 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து இவர்கள் மீது மோதியதில் இருவரும் இறந்தனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென இறந்த சந்தோஷ்க்குமாரின் தாயார் சகுந்தலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி கருணாநிதி 14 லட்சத்து 47ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கிட வேண்டுமென கடந்த 2017ஆண்டு தீர்பளித்தார். தற்போது அவற்றிற்கு வட்டியுடன் சேர்ந்து 20 லட்சத்து 75ஆயிரமாக அதிகரித்தது. பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் நேற்று முன்தினம் அப்பேருந்தினை ஜப்தி செய்திட மாவட்ட நீதிபதி, நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்திரவிட்டார். அதன் பெயரில் அரசு பேருந்தினை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள் தாலுகா அலுவலக பகுதியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.