மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எம்.எல்.ஏ. வீடு முன் தேங்கிய மழைநீர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எம்.எல்.ஏ. வீடு முன் தேங்கிய மழைநீரால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் துவங்கியது. வங்க கடலில் புயல் சின்னம் உருவானதால் தலைநகர் சென்னை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
கடந்த 13 தினங்களில் காஞ்சிபுரம் பகுதியில் 271 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 297 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 402 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 191 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 380 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 262 மில்லி மீட்டர் என மொத்தம் 2005.30 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காஞ்சிபுரத்தில் 18.20 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 33.40 மில்லி மீட்டர் , உத்தரமேரூரில் 15 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 13 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 32 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 49.50 மில்லி மீட்டர் என மொத்தம் 161.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்த நிலையில் 11 மணி முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் பெய்த கனமழை முப்பது நிமிடம் நீடித்தது. காஞ்சிபுரம் நகரில் பல்வேறு சாலைகளில் தேங்கிய மழைநீர் மெல்ல மெல்ல வடிந்தும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் மாவட்ட ஊராட்சி மையம் மற்றும் தேநீர் விடுதிகள் அமைந்துள்ள பகுதி என அனைத்திற்கும் செல்லும் வழியில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதன் அருகிலேயே மழை நீர் வடிகால் கால்வாய்கள் இருந்தும் பயனற்று குளம் போல் தேங்கிய நீரிலேயே பொதுமக்கள் அலுவலர்கள் என பலர் செல்லும் காட்சியை காண முடிந்தது.
இதே போல் ரயில்வே சாலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் வீடு முன்பு மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டு இருந்தும் அப்பகுதியில் மின்சார வாரிய அலுவலகத்தில் இருந்து அவரது வீடு வரை மழைநீர் தேங்கியுள்ளது.
மாவட்டம் முழுவதும் மழை நீர் தேங்கா வண்ணம் இருக்க அனைத்து பகுதிகளிலும் கடந்த இரண்டு மாத காலமாக வெள்ள தடுப்பு பணிகளும் மழை நீர் அகற்றும் பணிகளும் முக்கியம் என்ன கூறி பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே இது போன்ற நிலையை காணும் போது வருத்தம் அளிப்பதாக அப்பகுதியை கடந்து சென்ற பொதுமக்கள் தெரிவித்தனர். இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் இது தொடர்பான கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.